கடவுள் ஆணா? பெண்ணா?
ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள்.அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த்தோட்டங்களும், மலைச்சாரலும், அடர்ந்த வனங்களும் போரடித்து விட்டன.
"கடவுளே!" என்று அழைத்தாள். கடவுள் அவள் முன் தோன்றினார். அவர் பார்வை அவள் கையில் இருந்த ஆப்பிள் மீது படிந்தது. " இந்த ஆப்பிளைச் சாப்பிடாதே!" என்று எத்தனை முறை உனக்குச் சொல்லியிருக்கிறேன்?" என்று ஏவாளைக் கடிந்து கொண்டார் கடவுள்.
"ச். போங்க!" என்று சலித்துக் கொண்டாள் ஏவாள்.
"என்ன பசிக்கிறாதா?" என்றார் கடவுள்.
"இல்லை. போரடிக்கிறது"
" என்ன வேண்டும்?"
"எனக்குப் பேச்சுத் துணைக்கு இன்னொரு மனித உயிரைப் படைத்துக் கொடுங்கள்" என்றாள் ஏவாள்
கடவுள் யோசித்தார். பின் சொன்னார்.:
"சரி. படைத்துவிடலாம். ஆனால் மூன்று நிபந்தனைகள்." என்றார்.
"என்ன?'
முதல் நிபந்தனை: அந்த உயிர் உருவம், உள்ளம் எல்லாவற்றிலும் உனக்கு நேர் எதிரானதாக இருக்கும். அங்கே பொறுமை இராது. அவசரம் இருக்கும். கனிவு இருக்காது, முன் கோபம் இருக்கும். அங்கே மென்மை இருக்காது, முரட்டுத்தனம் இருக்கும்."
"ஏன் அப்படி படைக்க வேண்டும்?"
"அப்போதுதான் அவனோடு மல்லுக்கட்டவே உனக்கு நேரம் சரியாக இருக்கும். போரடிக்கிறது என்று சொல்ல மாட்டாய்"
சற்று யோசித்த ஏவாள் சரி என்றாள்." இரண்டு நிபந்தனைகள் என்றீர்களே இன்னொன்று என்ன?"
"அவன் நம்மைப் போல் இல்லை. அவனுக்கு ஈகோ அதிகம். உன்னைத்தான் முதலில் படைத்தேன் என்று அவனுக்குத் தெரியவந்தால் அவனால் தாங்க முடியாது. அதனால் அவனைத்தான் முதலில் படைத்தேன், அவன் விலா எலும்பிலிருந்துதான் உன்னைப் படைத்தேன் என்று அவனுக்கு சொல்லி அனுப்பப் போகிறேன். நீ ரகசியத்தைப் போட்டு உடைத்து விடக்கூடாது"
"சரி போனால் போகிறது, விட்டுக் கொடுத்து விடுகிறேன்?" என்றாள் ஏவாள்
"இன்னொரு விஷயம். இந்த ரகசியம் நம் இருவருக்கு மட்டும்தான் தெரிய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொMடும் வெளியே சொல்லிவிடாதே!"
"ஏன் சொல்லக் கூடாது?'
"அதான் சொன்னேனே, அவனுக்கு ஈகோ அதிகம். நாம் இரண்டாவதாகத்தான் படைக்கப்பட்டோ ம் என்பதையே தாங்க முடியாதவனால், கடவுள் என்பவரும் உன் போல் பெண்தான் என்ற விஷயத்தை எப்படித் தாங்க முடியும்?" என்றாள் கடவுள்.
கடவுள் ஆணா? பெண்ணா? ஏன் பெண்ணாக இருக்கக்கூடாது என்று, ஆணின் விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்பதை மாற்றி எழுத வேண்டும் என்று வாதாடி வரும் பெண்கள் இந்தக் கதையைச் சொல்லிக் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஐரோப்பா கிடக்கட்டும். தமிழ் மரபென்ன? ஆதி பகவன், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், மலர் மிசை ஏகினான் எண்குணத்தான் என்று கடவுளை ஆணாகவே கருதி எழுதுகிறார் வள்ளுவர்.
வள்ளுவர் காலத்தில், பெண் ' ஒண்ணுந்தெரியாத' பிறவியாகக் கருதப்பட்டாள் என்பதற்குப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்க்கு உரை எழுதும் பரிமேலழகர், "பெண்மைக் குணத்தினால் தானாய் அறியமாட்டாமையால் கேட்டதாய்" என்று வள்ளுவர் சொல்லியிருப்பதாகக் கருதுகிறார். விவரம் அறியாதவளாகப் பெண் கருதப்பட்ட காலத்தில் அவளை சர்வ வல்லமை பொருந்திய கடவுளாகச் சித்தரிக்க யார் முனைவார்கள். அதனால் வள்ளுவத்தை விட்டுவிடலாம்.
அதற்குப் பல ஆண்டுகாலம் பிற்பட்ட பெரிய புராணம், உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று துவங்குகிறது. ஜோதியன், ஆடுவான் என்று அடுத்தடுத்து ஆணாகவே கடவுளை விவரிக்கிறது. இறைவனே முதலடி எடுத்துக் கொடுக்க சேக்கிழார் இயற்றிய காவியன்ம் பெரிய புராணம் என்பதால் இதை கடவுளுடைய ஒரு சுய அறிமுகமாக (self introduction) எடுதுக்கொள்ளலாமா?
கம்பர் இந்த வம்பே வேண்டாம் என்று, 'தலைவர்' என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு பொதுச் சொல்லைப் பயன்படுத்தி 'அவருக்கு' சரண் நாங்களே என்று காலில் விழுந்துவிடுகிறார்.
ராமன், கிருஷணன், சிவன், விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி என்று கடவுள் என்ற கருத்தாக்கத்திற்கு ஆண் பெண் என்ற தோற்றங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கடவுளைப் பொன்னார் மேனியனாகவோ, பச்சைமாமலை போல் மேனியாகவோ, கதிர் மதியம் போல் முகத்தானாகவோ கவிஞர்கள் கற்பனையைக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு, இயற்கையைக் கடவுளாக மனிதர்கள் கண்ட
காலத்தில் கடவுள் ஆணா? பெண்ணா?
இளங்கோவடிகள், கடவுள் வாழ்த்துப் பாடுவதில்லை. மங்கல வாழ்த்துப் பாடுகிறார். சூரியன், மழை இரண்டையும் வாழ்த்தும் பாடல்கள் அதில் இடம் பெறுகின்றன.
காவிரி, வைகை ஆகிய நதிகளைப் பெண்ணாக வர்ணிக்கும் இளங்கோ மழை ஆணா பெண்ணா என்று குறிப்பிடுவதில்லை. ஆனால் பூமியைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். ( வண்ணச் சீரடி மண் மகள் அறிந்திலள்)
வைதீக மதங்கள், பஞ்ச பூதங்களில் மண்ணைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஆண்களாகவே குறிப்பிடுகின்றன. மழையின் கடவுள் இந்திரன் ( பலர் நினைப்பது போல் வருணன் அல்ல. வருணன் கடலின் கடவுள். அவனது வாகனமே மீன் -மகரம்-தான்) என்ற கருத்தாக்கம் வைதீக மதங்களோடு வந்ததாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ் மரபில், நிலம் என்னும் நல்லாள் மட்டுமல்ல, மழையும் கூடப் பெண் கடவுள்தான். சான்று இன்றும் வணங்கப்படும், 'மாரி' அம்மன். மழைக்குத் தமிழில் 'எழிலி' (அழகானவள்) என்று ஒரு சொல் இருக்கிறது.
அக்னியைக் கும்பிடும் வழக்கமும் வைதீக மதங்களோடுதான் வந்திருக்க வேண்டும். அக்னியைக் கும்பிட ஆரம்பித்த கலாசாரத்தில், இந்திரன் மழைக்கடவுளாகியிருக்க வேண்டும். புறநானுற்றில் 'பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி' என்று ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது. அவர் முந்நீர் விழவு என்று மழைக்காக விழாக்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விழாக்கள்தான் இந்திர விழாக்களாக ஆகியிருக்க வேண்டும். சிலப்பதிகார இந்திர விழா மழை வேண்டி நடந்த விழா அல்ல. அது கோடைகாலத்தில், சித்திரை மாதத்துப் பெளர்ணமி அன்று நடைபெற்ற வசந்த விழா. அப்போது காவிரி நீர் நிறைந்து மலர்கள் சூடி நடந்ததாக மாதவி வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள். வைதீக மதங்கள் வருவதற்கு முன் மழை வேண்டி நடந்த விழாக்களில், இந்திரனிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.பாரியைப் போல இன்னொரு வள்ளல் பேகன் அவன் காலத்தில் வாழ்ந்த கபிலர், மழை வேண்டிப் பாடிய பாடலில் இந்திரனைக் காணோம். அவர் வேண்டிய கடவுள் முருகனாக இருந்திருக்கலாம்.
தொல்காப்பியத்தில் வருணன் என்ற சொல்லைப் பயன்படுத்தும் தொல்காப்பியர் இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. மாறாக வேந்தன் என்று எழுதுகிறார். வேந்தன் என்றால் அரசன் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.
பழந்தமிழ் நூல்களில் நெருப்பை முன்னிறுத்திச் சடங்குகள் செய்தாக அதிகம் தகவல்கள் இல்லை. தமிழில் அக்னி தீ என்று சொல்லப்படுகிறது. நல்லது அல்ல என்பதற்கு முன் அடையாகப் (prefix) பயன்படுத்தப்படுவதும் இந்தச் சொல்தான்.(உதாரணம்: தீ வினை) ஆனால் நீர் நிலைகளைக் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன. அருவி, ஆறு, சுனை, துறை, ஓடை, துருத்தி, கடல், ஊற்று, பொய்கை, மடு, குழி, குளம், ஆவி, வாவி, செறு, கேணி, கிணறு, ஊருணி, ஏந்தல், தாங்கள், இலஞ்சி, கோட்டகம், ஏரி, அனை, கால்வாய், மடை, சமுத்திரம், வாரிதி, தீர்த்தம் இவை அனைத்தும் நீர் இடங்களை (water sources) தமிழ் சொற்கள். இந்தப் பெயர்களில் அமைந்த பல ஊர்கள் இப்போதும் தமிழ் நாட்டில் இருக்கின்றன.
நீர் நிலைகளைக் காவல் காக்கும் தெய்வமாக பெண்களை பெளத்த மரபிலும் குறிப்பிடுகிறார்கள். சம்பாபதி என்பது அந்தத் தெய்வத்தின் பெயர்.இதற்கான ஆதாரங்கள் மணிமேகலையில் இருக்கின்றன. புத்த சாதக கதைகளில் ஒரு மணிமேகலை வருகிறார். அவரைக் கடல் தெய்வமாக, கடல் பயணம் செல்வோருக்கு ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றும் தெய்வமாக அந்தக் கதைகள்
சித்தரிக்கின்றன.
கெடுதி செய்யும் பெண் தெய்வங்களையும் பற்றி இளங்கோ எழுதுகிறார்: மதுரைக்கு வரும் வழியில், காட்டில், தாகத்தில் தவிக்கும் கண்ணகிக்குத் தாமரைப் பொய்கையிலிருந்து நீர் கொண்டு வரச் செல்லும் கோவலனை வனசாரிணி என்ற கானுறை தெய்வம் மயக்க முயல்வதாக சிலப்பதிகாரத்தில் ஒர் காட்சி விரிகிறது.
இயற்கை வழிபாடு இருந்த காலத்தில் கடவுள் பெண்ணாக இருந்திருக்கிறார். அவர் ஆணாக எப்போது மாறினார் என்பதுதான் என் கேள்வி. வைதீக மதங்கள் வந்த பின்னரா? அல்லது அதற்கும் முன்னரேவா? மலையாளிகளைப் போலத் தமிழ் சமூகமும் தாய் வழிச் சமூகமாக இருந்ததா? அப்படியானால் அது தந்தைவழிச் சமூகமாக மாறியது எப்போது? கி.பி.10ம் நூற்றாண்டு வாக்கில் என்று ஒரு கருத்து இருக்கிறது, அது உண்மைதானா? தந்தை வழிச் சமுகமாக மாறியதால்தான் கடவுளும் ஆண் ஆனாரா?
மற்ற மரபுகளில் - குறிப்பாக நம்மைப் போலவே பழமை வாய்ந்த சீன மரபில்- என்ன சொல்கிறார்கள்? கடவுள் ஆணா? பெண்ணா/
ஏன் இப்போது இந்தக் கேள்விகள் என்கிறீர்களா? அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததா என்று அகழ்வராய்ச்சித் துவங்கியிருக்கிறது.நாமும் நம் பக்கத்தில் தோண்டி வைப்போமே என்று இலக்கியத்தில் கை வைத்தேன். அது கேள்விகள் என்னும் சுரங்கத்தில் இறக்கி விட்டது.
இது குறித்து நன்கு அறிந்த இலக்கிய வல்லுநர்கள், மானிடவியல் அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் யாராவது கை தூக்கி விடுவார்களா? ( அவர்கள் ஆண்களாகவும் இருக்கலாம், தப்பில்லை)